180 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

180 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – பாதாளக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது!

மொறட்டுவ, ராவதாவத்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 180 கோடி ரூபாய் பெறுமதியான 150 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் தலைவர் மகேந்துரே மதூஷின் நெருங்கிய சகாவின் வீட்டிலிருந்தே இந்தப் பெரும்தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், T56 ரகத்தைச் சார்ந்த சுமார் 3000 ரவைகள், தொலைபேசி உள்பட பெருந்தொகையான பொருள்களும் கைப்பற்றப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடு, மாகந்துரே மதூஷ் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் சகாவான கெவுமா என்ற பாதாள உலகக்குழு உறுப்பினருக்கு சொந்தமானது.

500 கோடி பெறுமதியான வைரத்தைத் திருடியதாகக் கூறப்படும் கெலும் இந்திக்க என்ற சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ஹெரோயின் தொடர்பாக தெரியவந்த்து. இந்த சந்தேகநபர் இன்று ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீட்டில் நீண்டகாலம் வசித்து வந்துள்ளார்.

இந்த வீடானது, பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷ் தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்திய வீடு என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net