பொள்ளாச்சி சம்பவம் – தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறது!
பொள்ளாச்சியில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய கோரி பொள்ளாச்சியில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பேரணி இன்று(செவ்வாய்க்கிழமை) தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தி.மு.க உறுப்பினர்கள் பெருமளவானோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமான முறையில் கடத்தி, பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள திருநாவுக்கரசு உட்பட நால்வர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.