மன்னார் மனித புதைகுழி குறித்து இறுதி தீர்மானம்?
மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் 22ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து இதுதொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளனரென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின்படி, அவை 1400ம் ஆண்டு முதல் 1650ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மரணித்தவர்களுடையது என கூறப்பட்டிருந்தது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே எதிர்வரும் 22ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானமொன்று மேற்கொள்ளவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கார்பன் அறிக்கையானது மன்னார் மனித புதைகுழி விடயத்தில் இறுதி முடிவை மேற்கொள்வதற்கான ஆவணமாக அமையாது என்றும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.