அரசாங்கத்தை கவிழ்க்க நாம் எப்போதும் தயார்!
அரசாங்கத்தை நாம் கவிழ்ப்பதற்கு எப்போதும் தயாராகவுள்ளோம். எனவே எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசைக் கவிழ்க்கும் உரிமை எமக்கு உள்ளது. பெரும்பான்மைப் பலத்துடன் அரசைக் கவிழ்த்தே தீருவோம். இன்று மின் துண்டிப்பு, நீர் மற்றும் அதிக வரி காரணமாக மக்கள் துன்பப்படுகின்றனர்.
இதனை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். அரசைக் கவிழ்த்தே தீரவேண்டும். எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெறுவோம்.
எமது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானித்து, உறுதியாக வெற்றி பெறக்கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவோம். அவசரப்பட்டு தீர்மானம் எதனையும் நாம் எடுக்கமாட்டோம்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, அவர் மீது சிலருக்கு இருக்கும் பயத்தை வெளிக்காட்டுகின்றது” என கூறியுள்ளார்.