கொழும்பு, ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம் ; வீட்டுரிமையாளரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு !
ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். இன் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள், பயங்கரவாதிகள் மற்றும் தெளஹீத் ஜமா அத் அமைப்பினரின் தகவல்கள் அடங்கிய டெப் கணினி ஒன்று, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச் சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இந் நாட்டில் மத்திய நிலையம் ஒன்றினை முன்னெடுத்துச் செல்ல இடம் வழங்க்கியமை தொடர்பில் அவ்வீட்டின் உரிமையாளரைக் கைதுசெய்ய பொலிசார் அவரைத்தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் கூறினர்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடமொன்று உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முனசிங்க, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க ஆகியோரின் மேற்பார்வையில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கருணாரத்ன, ஆமர் வீதி பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.பி. பிரசாத் ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.