உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும் அதிசயம்.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் ஆய்வுரைகளை ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனின், முதல் நாவலான நடுகல் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு காணும் நடுகல் நாவலுக்கு சிறப்பான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஈழப் போரில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பி இடையிலான வாழ்வும், போராட்டத்திற்கு செல்லும் அண்ணனின் நினைவுகள் மீதான தம்பியின் தேடலாகவும் அமையும் கதையைக் கொண்ட இந் நாவல், தமிழீழ தேசம் எப்படியிருந்தது என்பதை பேசுகின்றது.

பிரான்ஸ் மற்றும் இலண்டனில் இந்த நாவலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், சுவிஸ், டொன்மார் மற்றும் அவுஸ்ரேலியாவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பிதழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net