முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்!
தமிழ்த் தேசிய இராணுவத்தினை விடுதலைப் புலிகள் அழித்த தருணத்தில், அவர்களின் பெருமளவான ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கேள்வி – போரின் பின்னரான சூழலில் துணைக்குழுக்களின் ஆயுதங்களை முழுமையாக களைந்து ஜனநாயகத்தினை நிலைநாட்டியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறுகிறார். அப்படியிருக்கையில், முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட்டிருக்கலாமல்லவா?
பதில் – முஸ்லிம்கள் ஊர்காவல் படையில் இருந்த காலத்தில் ஆயுதங்கள் பெருமளவில் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்படவில்லை.
அந்த ஆயுதங்கள் அவர்களிடத்தில் இருக்கின்றன என்பது உண்மையான விடயமாகும். இந்தியப்படைகள் இலங்கைக்கு வந்த காலத்தில் தமிழ்த் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய இராணுவத்தினை விடுதலைப் புலிகள் அழித்த தருணத்தில், அவர்களின் பெருமளவான ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இவ்வாறு தான் முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதற்கு வழிகள் ஏற்பட்டன.