சமூக ஊடகங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த தெரிவுக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உரைகள் மற்றும் காணொளிகளை பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பிரசாரங்களை மேற்கொண்டமையால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பல தடவைகளில் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராயவே இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதரசாக்கள் தொடர்பான நிபந்தனைகளை விதிப்பது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் இன்று தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.