இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்!

நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என பிரபல் அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது கருத்தில்

தற்போது நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் அளுத்கம முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட மோசமான சம்பவங்களை அடுத்து 2015 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேர்தலில் நல்லாட்சியை நாம் கொண்டு வந்திருந்தோம்.

அதில் முஸ்லீம்களின் பங்கு அளப்பெரியது.இந்த ஆட்சி சுமூகமாக செயற்பட்டு வந்த போதிலும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கருத்து மோதல்களால் இரு துருவங்களாக செயற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே உளவுப்பிரிவு தெரிவித்த நிலையில் ஜனாதிபதி பிரதமர் தமக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என் கூறுகின்றனர்.

இவ்விடயம் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.அவர்கள் பலர் இதனால் தப்பி சென்றுள்ளனர்.

மேற்படி விடயங்கள் இலங்கை மக்களை பாரதூரமாக பாதித்துள்ளது.பாமர மக்கள் படித்தவர்கள் முதல் கொண்டு இந்த அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அதிகளவான உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என கூறுகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் குழப்பநிலை தொடர்கின்றது. பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தால் இவ்வாறான தாக்குதலை தவிர்த்திருக்க முடியும். அரசாங்கத்தின் பிரிவினால் குழப்ப நிலை தொடர்வதனால் முஸ்லீம்கள் பல்வேறு வழிகளில் பாதிப்படைந்துள்ளனர். இதனால் முஸ்லீம் சமூகத்தின் அமைச்சர்கள் பதவிகளை இராஜநாமாச் செய்துள்ளனர்.

சமூகங்களில் ஏற்பட்டுள்ள பிளவுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக முஸ்லீம் சமூக அமைச்சர்கள் பதவியை தூக்கி எறிந்து பின்வரிசையில் அமர்ந்துள்ளனர். மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் றவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகியோர் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையில் இவ் ஒற்றுமையை மையப்படுத்தி ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலை நோக்கி செல்ல முன்வர வேண்டும்.இவ்வாறான சந்தர்ப்பத்தை மக்களும் எதிர்பார்த்துள்ளனர். இதனால் தான் ஒரு தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றனர்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஒற்றுமையினை காரணமாக வைத்து செயற்பட சகல அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.

-பாறுக் ஷிஹான்-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net