மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ள மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் சமகால அரசாங்கத்திலிருந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதில் முக்கிய மூன்று அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு 19 வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 03 ஆம் திகதி தனது அமைச்சு பதவிகளில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமையினால் அந்த வெற்றிடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்களை பிரதமர் பரிந்துரை செய்திருந்தார்.

எனினும் அதனை நிராகரித்த ஜனாதிபதி அவர் விரும்பிய மூவரை அந்த பதவிகளில் நியமித்தார்.

அமைச்சர்கள் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பது 19 வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என பிரதமர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்கள் நியமிக்கும் போது 19ஆம் அரசியலமைப்பிற்கமைய அவர்களின் பெயர்களை பிரதமர் பரிந்துரை செய்ய வேண்டும. எனினும் இங்கு அவ்வாறு செய்யவில்லை என பிரதமர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியலமைப்பு எதிராக ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை, பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை குறித்து ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net