முதியோர் – நினைவுகளின் நூலகம்

முதியோர் – நினைவுகளின் நூலகம்

முதியவர், மூதாலர், வயோதிபர், அப்பு, ஆச்சி, பாட்டன், பூட்டி எனப் பல அடையாளங்களிலும் உறவுகளிலும் எம்மருகில், எதிரில், அடுத்த வீட்டில் வாழும் மூத்தோரை நாம் எவ்வாறு பார்க்கிறோம்? அவர்களை நோக்கி கொண்டிருக்கும் எங்கள் பார்வை மேலானதா? உடலால் சோர்ந்தவர்கள் என்ற நோக்கிலா? அல்லது அனுபவத்தால் நிறைந்தவர்கள் என்ற பார்வையா?

“காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்” என்ற பழமொழியைப் போல வாழ்வின் அர்த்தத்தை நாம் உணர மறுத்து இயங்குகின்றோமோ? இது இழம் இரத்தத்தின் துடிப்பா? இல்லை எல்லாம் உணர்ந்தோமென்று நம்மை நாமே நம்பிக்கொள்ளும் மனதா?

ஒருகால அனுபவங்களை வாழ்ந்து, உணர்ச்சிகளின் ஆடம்பரத்தைக் கடந்து, வாழ்வின் உண்மையை நிதானமாக அறிந்தவர்கள் தான் முதியோர்.
அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஆண்டும் காலச்சுவடாகும்; ஒவ்வொரு நிகழ்வும் அனுபவத்தின் தொகுப்பாகும்.
இன்றைய நுட்ப உலகம் “அறிவியல்” என்ற பெயரில் தொழில்நுட்ப அறிவை வழங்குகிறது. ஆனால் முதியோர்கள் தந்து விடும் அறிவு – அது வாழ்க்கையை முழுமையாய் புரிந்து கொண்டு வாழ்வதற்கான நடைபாதை.

அவர்கள் தொலைந்து கொண்டிருக்கும் நெறிகளின் தெளிவே ,நம் மரபும், பண்பாடும், உறவுசார் ஒழுங்குகளும்.
அவை புழுதிபடாமல் இருக்க, முதியோர்களின் பங்களிப்பு அவசியம்.
அவர்கள் நடமாடும் நூலகங்கள்.
அவர்களோடு உரையாடுவது இலட்சக் கணக்கான புத்தகங்களைப் படிப்பதற்கும் மேல்.

அவர்கள் கடந்து வந்த துயரங்கள், இழப்புகள், சோதனைகள் இவையெல்லாம் அவர்களது வாய்மொழியால் நமக்குப் பொறுமையையும், பொறுப்பையும் கற்றுத் தருகின்றன.
சில நேரங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, பேசாமல் தவிர்க்கும் வார்த்தைகளும் நம்மை விழித்து நடக்கச் செய்கின்றன.

வாழ்க்கையின் நிலையில்லாத தன்மையை, இளம் தலைமுறையினர் உணரச் செய்யும் வலிமை அவர்களது அனுபவங்களே.
இன்றைய முதியோர் நாளைய நம்முடைய முகம். இன்று அவர்களை நாம் அணுகும் விதமே, நாளை நம்மிடம் வரும் உறவுகளின் முகமாகத் திரியும்.

பண்டைய சமூகம் முதியோர்களை மையமாகக் கொண்டு இயங்கியது.
அவர்களின் செயல் வீச்சும், அனுபவப் பகிர்வும் சமூகத்தை வளர்ச்சிப் படிநிலைகளுக்கே கொண்டு சென்றது.
இன்று அவர்களை வலிமையற்ற சுற்றாக வடிவமைத்துவிட்டோம். மூதியோர் இல்லங்களும், தனிமையும் அவர்களின் வாழ்வாகிவிட்டன.

நவீனக் குடும்ப வாழ்கை முறை, “சுயம், வளர்ச்சி, தன்நம்பிக்கை” என்ற பெயரில் முதியோர்களை தனிமைப்படுத்துகிறது.
வேகம், விருப்பு, தனி வாழ்க்கை, தனிமனித சுதந்திரம் என நவீன வாழ்வியல் முதியோர்களை குடும்பத்தின் “பொருளற்ற உறுப்பாக” மாற்றுகிறது.

இன்று, அவர்கள் அதிகமான நேரங்களை மௌனத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும், கண்நிறைந்த ஏக்கங்களுடனும் செலவழிக்கின்றனர்.
அவர்களது மனம் தன் குடும்பத்தில் பற்றுதல், வாழ்வு ,அர்த்தம், பங்கு என்பவற்றை நாடி தவிக்கிறது.

நவீன உலகம் வசதிகளை வழங்கினாலும் உணர்வுப் பூர்வம், நெருக்கம், கவனிப்பு ஆகியவற்றில் ஏமாற்றமளிக்கிறது.
மனஅழுத்தம், பயம், நிராசை, உடல் நோய்கள் மட்டுமல்ல அறியப்படாத மனவலியும் அவர்களைத் துன்புறுத்துகிறது.அவர்கள் இவ்வாறாக உலாவுகிறார்கள் என்றால், நாம்தான் உலாவ விட்டிருக்கிறோமோ என்று வெட்கப்பட வேண்டும்.

இவர்களை இப்படி நாம் விட்டிருப்பது ஏற்கத்தக்கதா? இல்லை! இது ஏற்கத்தக்கதல்ல.

ஒரு சமூகத்தின் மதிப்பு அதன் மூத்தவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையில்தான் தெரிகிறது.
அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே, அந்த மரியாதையின் பிரதிபலிப்பாக அமைகிறது.
முதியோர் என்பது வயதால், உடல் சோர்வால் மதிப்பதல்ல அறிவுக்கும், அனுபவத்திற்கும் சார்ந்த ஓர் அடையாளம்.
நாம் அவர்களை அணுகும் விதமே, நாளை எம்மை யார் எப்படி அணுகப்போகிறார்கள் என்பதற்கான முன்னோட்டம்.இன்று அவர்களுக்கு நாம் அர்ப்பணிக்கும் கவனமே
நாளை எங்களுக்கு கிடைக்கப்போகும் அன்பும் அரவணைப்புமாகும்.

14-05-2025
ப. பார்தீ

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net