“வரலாற்றை மறைத்தவர்கள், விடுதலையை முடக்கியவர்கள்”
18-05-2025
ப.பார்தீ
2009 மே 18
தமிழீழ மீட்புப்போரில் மரணமாகிக்கொண்டிருக்கும் மக்கள்,மாவீரர்கள் வரிசையில் முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டத்தின் அடையாளம் தன்னை அமைதியாக்கி ஆயுதப்போராட்டத்தின் தோல்வியினை உலகறியச் செய்தது. அந்த போராட்டத்தின் பெரும் பங்காளர்களான மக்கள் செய்வதறியாது தங்கள் போராட்ட ஓர்மத்தின் வழி தொடர்ந்து இயங்கிக்கொள்ளவே விரும்பினார்கள்.தங்களுக்குரிய அரசியல் நிலையொன்றை எட்டி விடவேண்டுமென்றே துடித்தார்கள்,ஏங்கினார்கள், என்பது தமிழ் மக்களுக்குள் இருக்குமொருவனாக என் அவாவும் கூட அது. ஆனால் நடந்துகொண்டிருப்பது என்ன ?என்பது போராட்டத்தின் இயங்குதிசை,போராட்ட கட்டமைப்பு வடிவங்கள் மக்கள் போராளிகளின் முகங்கள் மறுவாசிப்புக்குட்படுத்த வேண்டியவர்களாகவே நாம் உள்ளோம்.
தமிழ்மக்கள் நாம் தொடர்ந்தும் கருத்து முதல்வாத சிந்தனைக்குள் சிக்குண்டு எந்தவித கேள்விகளுமற்றவர்களாக தமிழீழ ஆயுதப்போராட்ட போராட்ட இலச்சினைகளை அடையாளங்களை காவிவருபவர்களை ஏற்கும் கனவு காவிகளாகவே தொடர்ந்தும் உருவாக்கப்பட்டு இவ்வுலகிற்கு காட்டப்பட்டு கொண்டிருக்கின்றேம். 2009 மே 18 தமிழீழ போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவத்தை தமிழ்மக்களின் பெரும் ஆதரவோடு முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை அழிக்கப்படுகின்றது அத்தோடு அந்த போராட்ட வடிவம் முழுமையாக அமைதியடைகின்றது. ஆனால் பிழைப்புவாதிகளால் எங்களுக்கு நிகழ்த்தப்பட்டது என்ன “எம்தலைவர் சாகவில்லை”என்ற ஹிந்திய,சிங்கள அரசுகளின் அரசியல் தேவையை நிறைவேற்ற ஈழத்தமிழ்சமூகத்தின் போராட்ட முகங்களாக தங்களை காட்டிகொண்ட அனைத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அமைப்புக்களும் உண்மையை தமிழ்மக்களிடமிருந்து மறைத்து “எம்தலைவர் சாகவில்லை” என்று அறமற்று அறிவுக்கும் ஆய்வுக்கும் புறம்பான பல நாடகங்களை இன்றுவரை மேடை ஏற்றிகொண்டிருக்கின்றது அதற்கு துணையாக காசு முதலீடு செய்து தாய்நிலத்துள் பல அரசியல்கட்சிகள் சுயேட்சைகளென்று தங்கள் எடுபிடிகளாக இயங்க வைக்கின்றது,புலம்பெயர்ந்த தேசத்திலோ இவர்களின் நிர்வாகங்களுக்கிடையில் பணப்பட்டுவாடாப் பிரச்சினைகளே பெரும் கெடுபிடியாகவே உருப்பெருக்க, நேர்மையுடனும் மக்கள் நலனுக்காக இயங்கிய ஒவ்வொருவரும் பகுதி பதியாக வெளியேறி தங்கள் தனிவாழ்கையில் கலந்துவிட்டார்கள்.ஆங்காங்கே எழும் மக்களிற்கான சில குரல்களும் விமர்சனங்களும் துரோகிகளாக்கப்படுவதில் இவர்களின் பங்கு பெருமளவில் இருக்கும்.
இவர்களின் செயற்பாட்டுத் தன்மை, இளையவர்களைக் கூட்டிக்கொள்வதில் இல்லை.
சமகால அரசியல் நகர்வுகளை வாசிப்பதோ, மாற்றங்களை எதிர்கொள்வதோ இல்லாத ஒரு உறைந்த நிலைப்பாட்டுடனே, ஒரு மாதிரித் தனித்துச் செயற்படுகின்றது. இந்தச் செயற்பாடு, போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உருவகத்தில் செயலாற்றினாலும், உண்மையில் அது போராட்டத்தின் பெயரால் மக்கள் அரசியற் செயற்திறனை முடக்கும் நவீன கட்டமைப்பாகவே மாறியுள்ளது.
இது வரலாற்றை வாசிக்காத, வரலாற்றை முறியடிக்கின்ற செயற்பாடாகும்.
அதாவது, உற்பத்தித்துறைகளின் நகர்வுகள், உரிமைப் போராட்டங்களின் புதிய உருபுகள், ஒடுக்கப்பட்டவர்களின் மாற்றத்திறன் ஆகிய அனைத்தையும் புறக்கணித்து, வரலாற்றை நிலைக்களமாக்கும் இயக்கமாகவே இது செயற்படுகிறது.
மாற்றத்தின் பொருளும் சாத்தியத்தன்மையும், நிலைத்த அரசியல் மொழிகளுக்குள் அடைத்து வைத்து,மக்களை “இடைவிடாத போராளிகளாக” ஒரு கருத்துமுறையின் சிறையில் பிணைத்துவிடுகிறது.
இதனால் மக்கள் விடுதலைக்கான வழிகளையும், புதிய கருத்துப் பரிமாற்றங்களையும் புறக்கணிக்கத் தூண்டப்படுகிறார்கள்.இந்த நிலை, வரலாற்றை ஒரு முடிவடைந்த நிகழ்வாகப் பார்ப்பது மட்டுமல்ல, மக்கள் அரசியலின் செயற்கூறுகளையே விசையிழந்த புனைவாக மாற்றும் அபாயத்தையும் உருவாக்குகின்றது.
உண்மை பேசத் தளர்வது இவர்களது பழக்கமாயிற்று. வெளிப்படைதன்மை இவர்களுக்குப் புற நகையாகிவிட்டது.
வரலாற்றை வாசிக்கத் தெரியாத இவர்கள், தோல்வி என்பது எங்களது போராட்ட வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டது என்பதை வெறும் கனவுகாவலாக இருந்து இன்னும் ஒப்புக்கொள்வதேயில்லை. அப்படியிருக்க, இனிவரும் செயற்பாடுகள் மட்டும் மக்களுக்கானதாக மாறி இயங்குகிறது என அவர்கள் செயற்படும் அறியாமைகளிற்குள் இருந்து நாம் எப்படி அழைக்கமுடியும்?
இவர்கள் எப்போது மக்களின் பக்கம் நின்றார்கள் என்று, இனி நம்மால் நம்ப எப்படி முடியும்? வரலாற்றின் வலி உணராதவனிடம் எதிர்காலத்தின் விடுதலை வழி எப்படிக் கிடைக்கும்? மக்கள் நினைவுகளை பாதுகாக்கும் போராளிகளாக அல்ல;
மக்களை மறப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலைத்த கட்டமைப்புகளாகவே இவர்கள் செயற்படுகின்றார்கள்.
இவர்கள் நிலைகளை முன் பின் ஆய்ந்து தெளிவாகப் பார்க்க வேண்டும்.
உண்மைகளை ஐயமுற அறிந்து, பிழைப்புக்கும் பொய்க்காட்சிகளுக்கும் இடையே ஊடாடும் செயற்பாடுகளை முற்றாக உருக்கிப் பார்க்கத் தெரிந்துவிட்டது என்றால்,
இன அழிப்புக்குள்ளாகி நிற்கும் ஈழத் தமிழரெனும் பூர்வகுடி இனமாகிய நாம், இனி எந்த திசையில் நகர வேண்டும் என்பதற்கான தெளிவு நமக்குத் தோன்றும். அந்த தெளிவு, பழைய கருப்பொருள்களின் உதிர்கலன்களில் இருந்து அல்ல.புதிய திசைகளை எண்ணக்கூடிய,
புதிய தலைமுறையின் வீச்சைப் புரிந்துகொள்ளக்கூடிய,
மக்களிடம் இருந்து மக்களுக்குள் இயக்க மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடிய,
இயங்கும் இயக்குநர் நம்மிடம் தேவையென்பதை உணர்ந்ததாய் இருக்கவேண்டும். அத்துடன், விடுதலையை வெறும் நினைவாகவல்லாமல்,புனிதங்கள் நம்பிக்கைகள் நன்றியுணர்வுகள் என்பவற்றை அறிவுக்கண்கொண்டு பார்த்து
மாற்றத்தை நிகழ்த்தும் செயற்பாட்டு உந்துதலாக மாற்றக்கூடிய அரசியல் மனப்பான்மை நம்மிடையே உருவாக வேண்டியுள்ளது.
பழைய கோட்பாடுகளை மட்டும் தழுவும் திறனல்ல,
புதிய சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு தங்கள் உரிமைகளை மீட்கலாம் என்பதை
திறந்தவெளியில் மக்கள் ஒளியடையும் கட்டமைப்புகளாக நாம் மாறவேண்டும். இங்கு நாம் என்பது மக்கள் நாமே எல்லாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
18-05-2025
ப.பார்தீ