சீரழிந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும்!

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகத்திற்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது குடும்பம் ஒருபோதும் நாட்டையும், போர் வீரர்களான இராணுவத்தினரையும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொடுக்காது என்று கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் நிம்மதியுடன் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ராஜபக்ஷ குடும்பத்தை ஊழல் பேர்வழிகள், மோசடியாளர்கள் என்று பொய்யுரைப்பவர்கள் தாங்கள் செய்த ஊழல், மோசடிகளை மறந்துவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதுபோல் மக்கள் விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார். இவ்வாறான ஒரு நிலையில், நாமல் ராஜபக்ஷவும் தற்போது இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.