ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளதாக இலங்கையின் முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பினையடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடியும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன். பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பது குறித்து தற்போது எனக்கு கூறமுடியாது.

எமது நாட்டினை வளமான எதிர்காலம் நோக்கி வலுவானதாக மாற்றியமைப்பதே எனது இலக்காக இருக்கின்றது. அதற்கான திட்டங்களும் என்னிடத்தில் உள்ளன.

விசேடமாக கல்வி, சுகாதாரம், தொழிவாய்ப்பு, வர்த்தகம், நிதி முகாமைத்துவம், முதலீடுகள், சுற்றுலா உள்ளிட்டவற்றை விரைவாக முன்னேற்றம் காணச்செய்வதற்குரிய சகல திட்டங்களையும் ஒருங்கே கொண்டிருக்கின்றேன்.

தற்போது நாட்டில் முப்பது அமைச்சுக்கள் காணப்படுகின்றன. இவற்றினை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது. அதற்குரிய கொள்கையமைப்புடன் கூடிய செயற்பாட்டு கட்டமைப்புக்களும் என்னிடமுள்ளன.

அமைச்சுக்கள் மறுசீரமைப்பு குறித்த செயற்பாட்டு விடயங்கள் குறித்து யாராவது என்னிடத்தில் பகிரங்க வெளியில் வினாக்களை தொடுப்பதற்கு விரும்பினால் அவற்றுக்கு பதிலளிப்பதற்கு நான் எந்தநொடியிலும் தயாராகவே உள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net