முக்கிய குற்றவாளி சலா அப்தெஸ்லாம் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

isisபாரீஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாம் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான சலா அப்தெஸ்லாமை பொலிசார் தீவிரமாக தேடிவந்தனர். நான்கு மாதத் தேடுதலுக்கு பிறகு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கடந்த மாதம் 18-ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது செய்யப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகு, பிரஸ்ஸெல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் 3 ஐ.எஸ். மனித வெடிகுண்டுகள் நிகழ்த்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அப்தெஸ்லாமுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் , பாரீஸ் தாக்குதல் குறித்த விசாரணைக்காக, பிரான்ஸ் அதிகாரிகளிடம் அப்தெஸ்லாம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக பெல்ஜியம் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 3696 Mukadu · All rights reserved · designed by Speed IT net