நாடாளுமன்றம் கலைக்கப்பட சபாநாயகரே காரணம்!
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை நடந்த விடயங்கள் சம்பந்தமாக முழுமையாக சபாநாயகரே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் செய்த சட்டவிரோதமான செயல்கள் சம்பந்தமாக சட்டம் மூலம் எடுக்க முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்க கண்டியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சபாநாயகர் முற்றாக வேலைத்திட்டத்தை குழப்பினார். அது மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தே இந்த அழிவை மேற்கொள்ள பார்த்தார்.
சபாநாயகர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா தூதுவர்களுடன் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டார். சபாநாயகர், வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து கருத்து கேட்டார்.
உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முயற்சித்தார். சபாநாயகர் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டார் என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

