பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம்.

பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

சூட்டுச் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்ற பொலிஸாருக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296 ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பித்தது.

அன்றைய தினம் 4 பேர் சாட்சியமளித்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு இன்று புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த்து.

சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 40 சாட்சிகளில் இருவரும் சாட்சிகள் பொலிஸ் வாக்குமூலத்துடன் போதுமானவை என அரச சட்டவாதி மன்றுரைத்தார். அதனால் அவர்களிடம் சாட்சியம் பெறாமல் முடிவுறுத்துவதற்கு மன்று அனுமதித்தது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் உள்பட்ட மூவரிடம் இன்று சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை இன்று இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வழக்கு வரும் ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net