நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கடற்பரப்பினுள் இருக்கும் கருடன் பாம்பு கற்களை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் கடலில் நீராடிய வேளை மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் நாராயணன் கோவிலடியை சேர்ந்த எட்டு பேர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று இன்றைய தினம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவுக்கு சென்றுள்ளது.

தேர்த்திருவிழா முடிவுற்ற பின்னர் நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பினுள் காணப்படும் கருடன் பாம்பு கற்களை வழிபட சென்ற பின்னர் எட்டு பேரும் அப்பகுதியில் உள்ள கடற்பரப்பில் நீராடி உள்ளனர்.

அவ்வேளை கடலில் மூழ்கி மூவர் காணாமல் போன நிலையில் ஏனைய ஐவரும் கரை திரும்பியிருந்தனர். கோண்டாவில் நாராஜயன் கோவிலடி மற்றும் வைத்தியசாலை வீதியை சேர்ந்த தேவராஜா சாருஜன் (23 வயது) தேவராஜா சஞ்சயன் (22வயது) மற்றும் உதயகுமார் பகிரதன் (21வயது) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த மூவரில் இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மூவரும் சடலங்களாக சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net