சுவாதி கொலையில் தொடர்பு இல்லை.ராம்குமார் அதிரடி

13614948_1657752767881869_5943905946040314289_n
சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என் மீது போலீஸ் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ராம்குமார் ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24ம் தேதியன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணியளவில் பணிக்கு செல்வதற்காக காத்திருந்த இளம்பெண் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நலம் தேறியதும், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ராம்குமாரிடம், எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) நேற்று விசாரணை நடத்தினார். பின்னர், ராம்குமாருக்கு ஜூலை 18ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்தார். ராம்குமார் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல்நலம் தேறிய உடன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்குமார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டை போலீசார், ஐ.பி.சி., 309 கீழ் ராம்குமார் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீசாரின் விசாரணை முடிந்த பின், செங்கோட்டை அழைத்து வரப்படும் அவன், மீண்டும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார். இதன் மூலம் கொலை வழக்கில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையுடன், தற்கொலை முயற்சி வழக்கில் கூடுதலாக 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது.
சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கோரி ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர்.

சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், குற்றவாளி ராம்குமார்தான் உறுதியாக கூறி வந்த நிலையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Copyright © 5446 Mukadu · All rights reserved · designed by Speed IT net