“விக்கி மிகவும் பொறுப்பான மனிதர்” நாடாளுமன்றில் இடித்துரைத்தார் சம்பந்தன்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றில் வாதிட்டுள்ளார்.

sampanthan-and_ci
எழுக தமிழ் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டவை எனவும், பலவிடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையெனவும் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தி தனது உரையை ஆற்றியுள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன, அரசாங்கத்திடம் அதற்கான பதிலைக் கோரியிருந்தார்.

நேற்றைய நாடாமன்ற கூட்டத் தொடரில், தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே சம்பந்தன் விகினேஸ்வரனுக்காக தனது கருத்தை சபையில் தெளிவுபடுத்தினார்.

இவ்விடயம் குறித்து சம்பந்தன் சபையில் விளக்கமளிக்கையில்-

”எழுக தமிழ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு அவர் மறுப்பும் வெளியிட்டிருந்தார். அவர் இந்த சபையில் இல்லாத நிலையில், அவருக்கு இங்கு நியாயம் கிடைக்க வேண்டும். விக்னேஸ்வரனின் உரையின் தமிழ் வடிவம் எனக்குக் கிடைத்திருந்தது. அதை வாசித்து நான் அறிந்ததில் அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் பல கருத்துக்களை அவர் கூறியிருக்கவில்லை”

அவர் மிகவும் பொறுப்பான நபர். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சராக இருக்கும் அவர், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். வடக்கு மக்கள் அவரை கணிசமான பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் கருத்துக்களை தாம் வெளியிட்டிருக்கவில்லை என்று அவர் கூறும்போது, இதுபற்றி கருத்து வெளியிடுபவர்கள் அதற்கு முன்னதாக உண்மை என்னவென்பதை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என இரா சம்பந்தன் நாடாளுமன்றிடம் கோரியுள்ளார்.

குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net