அரசியல் கைதிகளை பார்வையிட்ட அனந்தி சசிதரன்!

அரசியல் கைதிகளை பார்வையிட்ட அனந்தி சசிதரன்!

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அவர்களை சந்தித்த அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. நடக்க முடியாதவர்களாகவும் செவிப்புலன் குறைந்துள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். கைத்தாங்கலாக வரக்கூடிய நிலையில் உள்ள 5 பேரை மாத்திரம் சந்தித்தேன்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் தங்களை மிகக்குறுகியகால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

இவ்வாறு மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தெளிவாக அரசியல் கைதிகள் பேசுகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களது போராட்டத்தினை மழுங்கடிக்கச்செய்கின்ற வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகள் உணவின்றி சாவிற்கு போராடிக்கொண்டிருக்கின்ற போது நாம் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளாக அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து மாறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Copyright © 0202 Mukadu · All rights reserved · designed by Speed IT net