வவுனியாவில் இரவோடு இரவாக வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார்!

வவுனியாவில் இரவோடு இரவாக வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார்!

வவுனியா – சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கஞ்சா விற்பனை மேற்கொள்ளப்படுவதாக நேற்று இரவு 10 மணியளவில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கிணற்றின் அருகில் இருந்து T 56 துப்பாக்கி ரவைகள் 22 மீட்கப்பட்டுள்ளதுடன், இதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் மரியம்பிள்ளை ஜேசுதாஸ் (வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் தான் மீன் பிடிக்க குளத்திற்கு சென்ற போது குளக்கரையில் பொதி செய்யப்பட்ட நிலையில் ரவைகள் காணப்பட்டதாகவும், அதனை தான் எடுத்து வந்து வீட்டு கிணற்றருகே வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net