சி.வி.விக்னேஸ்வரன் இப்போதுதான் அ, ஆ படிக்கின்றார்!

சி.வி.விக்னேஸ்வரன் இப்போதுதான் அ, ஆ படிக்கின்றார்!

அரசியலில் அ, ஆவையே இப்போதுதான் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படிக்க ஆரம்பித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறைசொல்லித் திரிகின்றார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களுக்கு உரிமை தான் வேண்டும். அபிவிருத்தி தேவையில்லை என்று சாரப்பட முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்வொன்றில் அண்மையில் பேசியுள்ளார். அவர் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அவர் வடக்கு மாகாண சபையை நடத்திய லட்சணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அவரது நடத்தையால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்கின்றார்.

எங்கள் கட்சியில் போட்டியிட்டு முதலமைச்சராகத் தெரிவானவர் விக்னேஸ்வரன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக செயற்படுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலில் எல்லாம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டார். திசை மாறிப் பறப்பவராக இருந்து கொண்டு எங்களைத் தீவிரமாக விமர்சிக்கின்றார்.

அரசியலில் அவர் இப்போதுதான் அ, ஆ படிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மை சகட்டு மேனிக்கு விமர்சிக்கின்றார். அவர் முதலில் அரசியல் படிக்கவேண்டும்.

எமது லட்சியத்தை எப்படித் தந்திரமாகப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அவர் படிக்கவேண்டும்” என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net