ஜனாதிபதி இழைத்தது பாரதூரமான குற்றம்!

ஜனாதிபதி இழைத்தது பாரதூரமான குற்றம்!

நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் நாட்டில் அரசியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு பொறுப்பானவர்கள் எவரும் இல்லை.

இதன் காரணமாகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையை கொண்டிருக்கினறார்கள் என்பதை தீர்மானிப்பதற்காக அதனை உடனடியாக கூட்டுமாறு கோருகின்றோம்.

நான் இன்னமும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் பிரதமராக உள்ளேன்.

19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவரால் பிரதமரை பதவிநீக்க முடியாது.

சபாநாயகரால் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியும். நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றியிருந்த ஜனாதிபதி, தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வேறுபாடுகள் காணப்படுவதாகக் கூறியிருந்தார்.

ஆம் அவ்வாறான வித்தியாசங்கள் உள்ளன, நான் நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவன் ஆனால் ஜனாதிபதி கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே இருவரிடையே காணப்படும் கலாசார ரீதியான வித்தியாசம்.

இதனைத் தவிர தனக்குத் வேறு எந்த வித்தியாசத்தையும் உணரமுடியவில்லை” என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net