ஏறாவூரில் தாய்ப்பால் புரைக்கேறி ஆண் சிசு மரணித்துள்ளது.
தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக சுமார் ஒன்றரை மாத வயதுடைய ஆண் சிசுவொன்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் 5ஆம் குறிச்சியை சேர்ந்த வெற்றிவேல் ஹபினேஸ் என்ற குழந்தையே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி லதா – வெற்றிவேல் தம்பதிக்கு 5ஆவது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
அந்த இரட்டையர்களில் ஒருவரான ஹபினேஸ் எனும் குழந்தைக்கு அவரது தாயார் சம்பவ தினமன்று தாய்ப்பால் ஊட்டிய நிலையில் கண்ணயர்ந்துள்ளார்.
பின்னர் நள்ளிரவு நெருங்கும் வேளையில் இரட்டையர்களில் மற்றைய குழந்தை அழுதுள்ளது.
அந்த குழந்தைக்குப் பாலூட்ட தாயார் கண்விழித்தபோது ஏற்கனவே தாய்ப் பாலருந்திய குழந்தை வாயினாலும், மூக்கினாலும் தாய்ப்பால் வெளிவந்த நிலையில் மூர்ச்சித்து காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தை உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை ஏற்கனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குழந்தையின் சடலம் உடற்கூறாய்வின் பின்னர் பெற்றோரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.