தமிழ்நாட்டின் பல பாகங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் பல பாகங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதான வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வரும் 20 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும்.

வானிலை நிலவரத்தை கணக்கிட்டு அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுநாள் நவம்பர் 20 முதல் 22 ஆம் திகதி வரை கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரையிலான மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கஜா’ புயலால் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தொடங்கும் மழை 20 ஆம் திகதி அதிகன மழையாகவும் மாற வாய்ப்புள்ளது.

சென்னையில் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதேவேளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகிறது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது.

எனவே வட தமிழகத்தில் உறுதியாக நல்ல மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 9467 Mukadu · All rights reserved · designed by Speed IT net