மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம்! பெற்றோர் முறைப்பாடு!

மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம்! பெற்றோர் முறைப்பாடு!

செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இது தொடர்பில் மாணவனின் தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாவது,

செம்மலை மகாவித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவனான எனது மகன் தற்கொலை செய்துகொண்டமையானது மாணவனை உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியிலும் பாடசாலை கல்வி சமூகம் பாதிக்க செய்தமையே காரணம்.

மாணவன் தற்கொலைக்கு சென்ற காரணம் இதுவரை சரியாக விசாரிக்கப்படவில்லை. மாணவன் தற்கொலை தொடர்பில் பாடசாலை சமூகம் இதுவரை சரியான பதிலை பெற்றோர்கள் உறவினர்களுக்கு வழங்கவில்லை.

சம்பவம் நடைபெற்ற கடந்த 29ஆம் திகதி அன்று மாலை 5.00 மணி ஆகியும் மகன் வீடு திரும்பவில்லை.

மகனின் இறுதி நிகழ்வின் பின்னரே பாடசாலையில் என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட ஏனைய மாணவர்கள் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மாணவன் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமே பொறுப்பு கூறவேண்டும்.

நாங்கள் மாணவனை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்து வருகின்றோம். நான் ஒரு ஆசிரியர் எனது பிள்ளை எவ்வாறு இருப்பான் என்பது எனக்கு தெரியும். அதனைவிட அவனை பற்றி பாடசாலையில் உள்ள வகுப்பறை ஆசிரியருக்கு நன்றாக தெரியும்.

சம்பவ நாள் அன்று தரம் 09 இல் கல்விகற்கும் 3 மாணவர்கள் விளையாட்டு திடலில் மாங்காய் ஆய்ந்து சாப்பிட்டுவிட்டு விளையாட்டு அரங்கிற்கு அருகில் சென்றுள்ளார்கள்.

விளையாட்டு மைதானத்தில் கடந்த நாட்களில் படையினர் வந்து விளையாட்டுப்போட்டிகளை வைத்துள்ளார்கள் அவர்கள் அங்கு பாவித்த சிகரட் மிச்சங்கள் அங்கு காணப்பட்டுள்ளன அதிலும் பேப்பரினால் சுற்றப்பட்ட துண்டை எடுத்த மாணவர்கள் அருகில் இருந்த தீப்பெட்டியினையும் எடுத்து பற்றவைத்துள்ளார்கள்.

அதன்பின்னர் அங்கிருந்து சென்ற மாணவர்களை தரம் 10இல் கல்விகற்ற மாணவர்கள் விசாரித்து என்ன செய்தார்கள் என்று படையினர் பாவித்த சிகரட் துண்டங்களை எடுத்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களை அழைத்த அதிபர் அந்த சிகரட் துண்டுகளை மேசையில் வைத்துவிட்டு அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் காட்டியுள்ளார் அது மட்டுமல்ல இந்த சம்பவம் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் குறித்த மாணவர்களை அறை ஒன்றிற்குள் பூட்டிவைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். மாணவன் இவ்வாறு செய்தது தொடர்பில் பெற்றோருக்கு பாடசாலை சமூகத்தினால் தெரியப்படுத்தவில்லை. மாலை 5.00 மணி ஆகியும் வீடு வரவில்லை. மாலை 5.00 மணிவரை மதிய உணவோ தண்ணீரோ இல்லாமல் மாணவர்களை அடைத்து வைத்துள்ளார்கள்.

பாடசாலை நேரம் முடிந்தும் மாணவர்களை பாடசாலைக்குள் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் வைத்திருந்தது பாடசாலை சமூகத்தின் தவறு.

மாணவன் விட்ட பிள்ளைக்கு அதிபர், ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை, சக மாணவர்கள் மத்தியில் குறித்த மாணவனை உளவியல்ரீதியில் தாக்கப்படுத்தியமை, பாடசாலை சமூகத்தின் தவறு அதிபர் ஆசிரியர் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம்.

எனது மகன் பாடசாலை ஆசிரியர் அதிபரின் உடல்தாக்கத்திற்கும் உளதாக்கத்திற்கும் உள்ளாகியே உயிரிழந்துள்ளார் இதற்கு பாடசாலை சமூகம் பொறுப்பு கூறவேண்டும் இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடக்கவேண்டும்.

ஒரு பாடசாலை சென்ற மாணவன் வீடு திரும்பாமல் பாடசாலை சீருடையுடன் சென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவனது மனதை பாதிக்கும் வகையில் பாடசாலை சமூகம் செயற்பட்டுள்ளது.

இதனை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களோ சிறுவர்கள் மீது அக்கறைகொண்டவர்களோ சரியாக விசாரணை செய்துகொள்ளவில்லை. எனது மகன் இறந்த பின்னும் அவனுக்கு கெட்டபெயரினையே பாடசாலை சமூகம் கொடுத்துள்ளது.

இதற்கான நீதி வேண்டும் இதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம் என மாணவனின் பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.



Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net