ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு!

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து வெற்றிபெற்றது.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பத்திலிருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

இறுதியில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக சச்சின் பைலட் மற்றும் ஏனைய அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஆல்பர்ட் அரங்கத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் கல்யாண் சிங் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4424 Mukadu · All rights reserved · designed by Speed IT net