முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவுவது அனைவரதும் கடமை விவசாய அமைச்சர் ஹரிஸ்

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் எம். ஹரிஸ் இன்று (05-01-2019) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர் எம்.ஹரிஸ் தனது அமைச்சின் செயலாளர், மற்றும் கமநல் சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கமநல நல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகார்கள் சகிதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற நிலைமைகளை ஆராயும் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இதன் போது வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடைகள், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள், அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்து அமைச்சர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் நாற்பதாயிரம் ரூபா காப்புறுதி சபையால் வழங்கப்படும் அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர்

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இத் தருணத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அனைவரதும் கடமை. எனவும் தெரிவித்தார்

வெள்ளத்தினால் பாதிப்புக்களுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது எங்களுடைய அமைச்சு. எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது, குறித்த கவனம் செலுத்தப்படும் அத்தோடு இரண்டு வார காலத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்

மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தினை தொடர்ந்து அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் வெள்ளத்தினால் அழிவடைந்த நெல் வயல்களை பார்வையிடுவதற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிளிநொச்சி பன்னங்கண்டி மற்றும் முரசுமோட்டை பிரதேசங்களுக்கும் சென்றிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net