மன்னாரில் மேலும் சில மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னாரில் 225 ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வுப் பணிகளில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மன்னார் – தலை மன்னார் பிரதான வீதியின் சதொச வளாகத்திற்கு அருகாமையில் உள்ள கடைத் தொகுதிக்கு செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், விரிவுபடுத்தப்படும் பகுதிகளிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.