வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்!

வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்க கூடிய விடயம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம். இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் அறிவு கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.
கலாநிதி சுரேன் ராகவனின் அறிவும் புலமையும் அவரை சரியான முறையில், ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அன்றி மக்களுக்காக சேவை செய்வதற்கு அவரை வழிநடத்தும் என எதிர்பார்க்கின்றேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.