வவுனியாவில் நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்ட குழப்பம்!
வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, தர்மலிங்கம் வீதிக்கு அருகே எம்.ஜீ.ஆர் சிலை வைக்கும் நோக்கோடு நேற்றிரவு சில நபர்களினால் பாரிய குழியொன்று தோண்டப்பட்டது.
இதனையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய இளைஞர்களினால் குழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இன்று காலை அவ்விடத்தில் கூடிய நபர்கள் குழி தோண்டும் நடவடிக்கையினை மீண்டும் முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகர சபையினர் மற்றும் பொலிஸார் குழியினை மூடுமாறு பணித்ததுடன் உரிய அனுமதியினை பெற்று சிலை வைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.
இதனையடுத்து தற்போது தோண்டப்பட்ட குழியினை மூடும் நடவடிக்கையில் குறித்த நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை உபதவிசாளரிடம் வினாவிய போது,
தனிநபர் ஒருவரின் கடிதம் மூலம் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினையடுத்து தற்சமயம் நகரசபை உத்தியோகத்தர்கள் மூலம் நிறுத்துமாறு கோரியிருக்கின்றேன்.
இவ் விடயம் தொடர்பாக நகரசபையின் தவிசாளரிடம் ஒரு கிழமைக்கு முன்னர் கடிதம் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் உப தவிசாளர் கூறியிருந்தார்.





