உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்கு தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அக்கறையின்மை அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இவர் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சிறைக்கைதி, தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளதால் அவருடைய உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவசீலன் 10 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதி யுத்த நேரம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக மூன்று வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

யுத்த காலத்தில் தனது சகோதரனையும், தாயையும் இழந்த இவருக்கு தந்தையாரே சிறைச்சாலைக்கு வெளியில் துணையாக இருந்துவந்தார்.

அவரும் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி உயிரிழந்தையடுத்து, அவருடைய நலன்களைக் கவனிப்பதற்கு எவரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற வழக்கு விசாரணைகளின் இயல்புக்கு அமைய சிவசீலனுக்கு எதிரான வழக்கும் நீண்ட கால இடைவெளி கொண்டதாகவே தவணை இடப்படுகின்றது.

இதனால் வழக்கு எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net