மோடி முன்னிலையில் பாஜகவில் சேரத் தயார் உதயநிதி ஸ்டாலின்!
திமுக அறக்கட்டளையில் நான் உறுப்பினராக இருப்பதை நிரூபித்தால் மோடி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துவிடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக இளைஞர் அணியை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர் வாரிசு அரசியல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் ராகுல் காந்தி, பிரியங்கா, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாரிசு அரசியலை சேர்ந்தவர்கள் என்பதை மறைக்கிறார்கள்.
இவர்கள் வரிசையில் தமிழிசை சேரவில்லை என்றும் அவர் வேறு பாதையை தேர்ந்தெடுத்து பாஜகவில் இணைந்தவர். ஆனால் திமுக, காங்கிரஸ் தலைமை வாரிசு நிறுவனங்களாகவே உள்ளன.
பாஜகவில் வாரிசு அரசியல் இருந்தாலும் திமுக, காங்கிரஸ் போன்று மொத்த கட்சியையும் கட்டுப்படுத்தும் தலைவர்களாக வரவில்லை என்றார்.
கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை கட்டுப்படுத்தும் திமுக அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சூர்யாவின் பதிவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதில் ‘நான் திமுக அறக்கட்டளையில் அறங்காவலராக இருப்பதை நிரூபித்தால் உங்கள் மோடி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துவிடுகிறேன்.
அது தான் மிகமோசமான தண்டனையாக இருக்கும். உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 
            