யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்!
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/01/BusStand-Snip-Jaffna-Hartal.jpg)
யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மூன்று மாடிகளை கொண்ட வர்த்தக தொகுதி , வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.
இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதியினை பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும் , தவறும் பட்சத்தில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் முதல்வர் தெரிவிக்கையில் ,
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/01/51001596_2848669651827279_638788883911278592_n.jpg)
தற்போதைய மத்திய பேருந்து நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடி , சுகாதார சீர்கேடுகள் , சன நெருக்கடிகள், வியாபர நிலையங்களுக்கான நெருக்கடி, இடப்பற்றாக்குறைகள் , ஆகியவற்றை தீர்க்கும் முகமாக தற்போதுள்ள பேருந்து நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளதனால் , தற்போதைய மத்திய பேருந்து நிலையம் தற்காலிகமாக ஸ்ரான்லி வீதியில் , யாழ்.புகையிரத நிலையத்திற்கு பின்புறமாக மாற்றப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகளின் பின்னர் தற்போது அங்கே தற்காலிக வர்த்தக நிலையம் நடாத்தியவர்களிற்கு மாநகர சபைச் சட்டத்திற்கு அமைய இடங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.