வடக்கின் முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/01/51074250_10156931179519643_4251243536789274624_n.jpg)
வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் அர்ஜுண ரணதுங்க யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தார்.
வடக்கில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.
வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர், வடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ் சேவைகளை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட உத்தரதேவி ரயில் பயணத்தின் போது அறிவியல் நகர் உப ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.
இந்த ரயில் நிலையத்தை அமைப்பதற்காக 20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.