மன்னாரில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு.

மன்னாரில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு.

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளினால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

மன்னார் – தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவு, 61ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவ வசமிருந்த 16 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 61ஆவது படை பிரிவு அதிகாரி ஜேம திலகரட்ன ஆகியோர் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை கையளித்துள்ளனர்.

மேலும் தள்ளாடி 54ஆவது படைப்பிரிவு அதிகாரி தனது பகுதிகளில் உள்ள மேலும் 3 இடங்களில் உள்ள காணிகளை விடுவிக்க உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பேசாலையில் 11 ஏக்கர், கூராய் பகுதியில் 26 ஏக்கர், ஜீவ நகரில் 5.6 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளனர்.

அதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டவுடன் குறித்த காணிகள் உடன் விடுவிக்கப்படும் என தள்ளாடி 54ஆவது படைப்பிரிவு அதிகாரி எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தள்ளாடி இராணுவத்தின் 61ஆவது படைப்பிரிவின் கீழ் காயா நகரில் இராணுவத்தின் வசம் இருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி காடாக உள்ளமையினால் வன வள தினைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஆவணங்கள் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net