வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்!

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்!

போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கின்றார்கள்.

இதற்கு காரணம் அரசியல் வாதிகள். தங்களுடைய சுய இலாபத்துக்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களைக் கொண்டு செல்கின்றனர்.

உண்மையிலேயே அரசியல் வாதிகளுடைய வாகனங்கள் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் , அமைச்சர் என்று குறிப்பிடும் போது பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடுவதில்லை.

அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது. இப்படித் தான் கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்துள்ளன. இதைப் பல இடங்களில் கண்டு பிடித்துள்ளோம்.

நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும்.

இதனால் தான் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net