வெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்?

வெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்?

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்குறித்த விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலகெங்கும் பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைதுசெய்ய அமெரிக்கா பல வழிகளை கையாண்டதாக கோட்டா கூறியுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் மறைந்திருந்த மலேசியர் ஒருவரை கைதுசெய்ய அமெரிக்க புலனாய்வு பிரிவினர் பல வழிமுறைகளை கையாண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளை கைதுசெய்ய உலகமெங்கும் பல்வேறு பாணியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக போர்க்காலத்திலும், ஜேவி.பி. கிளர்ச்சியின்போதும் வெள்ளை வான் உள்ளிட்ட பல வழிமுறைகள் கையாளப்பட்டதாக கோட்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளுக்காக, உலகெங்கும் இவ்வாறான நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கோட்டா கூறியுள்ளார்.

அத்தோடு, தான் பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த காலத்திற்கு முன்பிருந்த ஆட்சியிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததென குறிப்பிட்ட கோட்டா, தான் அறிமுகப்படுத்தியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவையென கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net