மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை!

மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை!

தனது மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரை எந்தவொரு நியாயமான தீர்வையும் வழங்காத மஹிந்த இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டுக் கட்சி எதிர்காலத்தில் தாங்களே ஆட்சியமைக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவோம் எனவும் கூறுகின்றனர்.

உண்மையில் இவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்.

ஏனென்றால் யுத்தத்தை நடத்தியவர் மகிந்த ராஜபக்ஷவே. அவரோடு இணைந்து செயற்பட்டவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களே.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக மார்தட்டிக்கொண்ட இவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வினை வழங்கி தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம்.

உண்மையில் இங்கு நடந்த யுத்தத்தை மற்றொரு நாட்டின் மீது தனது படையை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஒரு போராகவே மஹிந்த கருதினார்.

ஒரு நாட்டிற்குள்ளேயே அந்த நாட்டின் தேசிய இனங்கள் உரிமைக்காக போராடுகின்ற சந்தர்ப்பத்தை கிளர்ச்சியாகவே கொள்ளமுடியும். அதனை போராகக் கொள்ளமுடியாது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு கருதவில்லை.

மாறாக சர்வதேச நாடுகளின் உதவியுடன் பாரிய இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு தனது ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரை எந்தவொரு நியாயமான தீர்வையும் வழங்கவில்லை.

இப்போது மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் தமிழர்களுக்குத் தீர்வை வழங்குவோம் என்று கூறுவது போலியான சந்தர்ப்பவாத நடவடிக்கையாகவே கருதமுடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Copyright © 7832 Mukadu · All rights reserved · designed by Speed IT net