வடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்.

வடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள்.

இந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை முன்னெடுக்க முடியாதென தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருளாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் கூறியுள்ளார்.

தொல்பொருளாராய்ச்சித் திணைக்களத்தில் உருப்படியான தமிழ் தொல்பொருளாராய்ச்சியாளர் கிடையாது.

வடக்கு, கிழக்கில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் புத்தர் சிலை வைக்க நீங்கள் வழி செய்கிறீர்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரனும் பேராசிரியர் மண்டாவெலவிடம் தெரிவித்தார்.

பாராளுமன்ற மத நல்லிணக்கத் தெரிவுக்குழுக் கூட்டத்தின்போதே இவர்கள் இருவரும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். “வரலாற்றைத் திரிக்க வேண்டாம்” என்றும் தொல்பொருளாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் மனோ, சுமந்திரன் எம்.பி. ஆகியோர் தெரிவித்தனர்.

“வடக்கு, கிழக்கில் ஆங்காங்கே காணக் கிடக்கும் பெளத்த சின்னங்கள் அனைத்தும் சிங்களவர்களின் பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடக்கு, கிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி விரவி இருந்தது என்பது வரலாறு.

பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்கத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய, முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, திருகோணமலை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துகொண்டு, தொல்பொருளாராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் மண்டாவெலவிடம் சாரமாரியாக கேள்விகளைக் கேட்டனர்.

தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது மேலும் பேசப்பட்டபோது, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கு கிழக்கிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த தமிழர்கள் பெளத்த சமயத்தை தழுவி இருந்தார்கள்.

இன்று நீங்கள் வடக்கு, கிழக்கில் எங்கேயாவது பெளத்த சின்னங்களை காணுவீர்கள் என்றால், அது, தமிழ் பெளத்த சின்னங்கள். அதை சிங்கள பெளத்த சின்னங்கள் என்று கூறி, அத்துமீறிய குடியேற்றம் செய்கிறீர்கள். பெளத்த தேரர்களை அழைத்துச் சென்று அடாத்தாக புதிய விகாரைகளைக் கட்ட உதவுகிறீர்கள்.

திருகோணமலை, திருக்கேதீஸ்வரம் என்பன தமிழரின் பாரம்பரியமான சிவத்தலங்கள் மட்டுமல்ல, தேவாரம் பாடப்பட்ட தலங்கள். இவற்றின் கட்டுமானப் பணிகளுக்குத் தடை போடுகிறீர்கள். வவுனியாவில் வெடுக்குநாறி மலை மீதான கோவிலுக்குப் போகும் மலைப்பாதை படிக்கட்டுகளை அமைக்க தடை போடுகிறீர்கள்.

அப்படியானால் எப்படி சிவனொளிபாதமலைக்கு படிக்கட்டுகளை அனுமதித்தீர்கள்? நான் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர். உங்கள் திணைக்களம் இப்படி நடந்துகொண்டால் எனக்கு இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.

இவை பற்றி நான் இனி கடுமையாக இருக்கப் போகிறேன் என அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் மிக அழுத்தமாகக் கடும் தொனியில் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net