வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடியா..?

வவுனியாவில் மரக்கறி வியாபாரத்தில் மோசடியா..?

இலுப்பையடி தினச்சந்தையிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் நவீன சந்தையிலுள்ள மரக்கறி விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் வெவ்வேறு விலைகளில் மரக்கறிகள் விற்பனை செய்வதால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொள்வதாகவும் விற்பனை நிலையங்களில் விலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இலுப்பையடி தினச்சந்தையில் 35ற்கு மேற்பட்ட வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் மரக்கறியின் விலைகள் ஒவ்வொரு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பல விற்பனை நிலையங்கள் இலகுவாக பொதுமக்களை ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் இன்று இடம்பெற்றுள்ளது. இலக்கம் 2ஆம் விற்பனை நிலையத்தில் மரக்கறிகளை கொள்முதல் செய்ய வந்த ஒருவரிடம் ஒரு கிலோ கத்தரிக்காய் 200ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஒரு கிலோ கத்தரிக்காய் 80முதல் 100ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு விற்பனை நிலையங்களிலும் விலைகளை தாங்களாகவே நிர்மானித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை அடுத்து பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் பொதுமக்களின் முறைப்பாடு கிடைக்கப்பெற்று விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது இந்நிலையில் மரக்கறிகளுக்கு விலை கட்டுப்பாடு கிடையாது எனவே உங்களுடைய விலைகளை விற்பனை நிலையங்களில் கட்டாயம் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது எனினும் இன்று வரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை
தினச்சந்தைக்கு முன்பாக ஒவ்வொரு நாளும் மரக்கறி விலைகளின் விலைப்பட்டியல் ஒன்று காட்சிப்படுத்தப்படும்போது பொருட்களின் விலைகளை அறிந்து மரக்கறிகளை தயக்கமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக விலைக்ககட்டுப்பாட்டு அதிகாரசபையின் உத்தியோகத்தரை தொடர்புகொண்டு இவ் விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net