படையினர் வசமுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு கோரிக்கை.
யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியுள்ளார்.
யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராய்ச்சியிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஆளுநர், யாழ். கட்டளைத் தளபதியுடனான கலந்துரையாடலிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து ஆளுநருக்கு கட்டளைத்தளபதி விளக்கமளித்தார்.
மேலும், ஜனாதிபதயின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில் அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப் பிரச்சினைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருமாறும் ஆளுநர் கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.