யாழில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக தனியார் காணிகள் சுவீகரிப்பு
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கவென தனி நபர்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல், காணி உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகம் ஊடாக இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள 6 தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு கொண்ட காணிகளை கடந்த 24 வருடத்திற்கு மேலாக பொலிஸார் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
அக்காணிகளை தமது பயன்பாட்டிற்காக நிரந்தரமாக கையகப்படுத்த காணி சுவீகரிப்பு சட்டத்தின் ஊடாக முதலாவது அறிவித்தல், காணி உரிமையார்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலுக்கு காணிகளை பொலிஸாருக்கு வழங்க தமக்கு இணக்கமோ, சம்மதமோ இல்லை என பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக காணி உரிமையாளர்கள் பதில் அனுப்பி வைத்துள்ளனர்.