நடுக்கடலில் போதைபொருள் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!
நடுக்கடலில் போதைபொருள் கடத்தலை தடுக்க இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு உதவி செய்து வருவதாக வடக்கு கட்டளைத் தளபதி பியஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து (சனிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை கடற்படை சார்பில் கடத்தலை தடுக்க பல கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்தாண்டு சுமார் 2,100 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுள்ளது. மேலும் கடந்த 9 வாரத்தில் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இலங்கை கடற்படை தொடர்ச்சியாக போதைபொருள் கடத்தலை தடுக்கவும் கடத்தல்காரர்களை பிடிக்கவும் ரோந்து கப்பல்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் கடத்தல்காரர்கள் நுழைந்தால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் அளித்து அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இலங்கை கடற்படை ஒரு போதும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது கிடையாது. அப்படி எல்லை தாண்ட வேண்டிய அவசியம் இருந்தால் இந்திய உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இந்திய எல்லைக்குள் சென்று கடத்தல்காரர்களைக் கைது செய்வோம்.
இதனைத் தவிர ஒருபோதும் இந்திய எல்லைக்குள் எங்கள் படகு நுழைவது கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடித்த மீனவர்களை மட்டுமே நாம் கைது செய்துள்ளோம். இப்போது கடல் எல்லை பாதுகாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.