மன்னார் மனித புதைகுழி தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை.
மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின் கடந்த எட்டாம் திகதி மன்னார் புதைகுழி அகழ்வு பணியானது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தலைமையில் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
கூட்டத்தின் பின்னரே குறித்த மனித புதைகுழியை தொடர்ச்சியாக அகழ்வு செய்வதா? அல்லது மனித புதைகுழி அகழ்வு பணியை முடிவுறுத்துவதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன், மன்னார் மனித புதைகுழி தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் இதர சான்று பொருட்களின் ஆய்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நாளை மாலை குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணாமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் சமூகமளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.