வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை!

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை! முகாமையாளர் கைது!

வவுனியா, கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வயதில் குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை செய்த மதுபான நிலையத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதை ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்குச் சென்ற 21 வயதிற்குக் குறைந்த இளைஞன் ஒருவருக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இளைஞனை அழைத்துச் சென்று வயதினை உறுதிப்படுத்திய போதை ஒழிப்புப் பொலிஸார் மதுபான விற்பனை நிலையத்தின் முகாமையாளரைக் கைது செய்து வியாபார நிலையத்தினையும் மூடியுள்ளனர்.

முகாமையாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் அண்மைய காலமாக பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்களில் இருந்து வருகின்றதுடன் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதாகவும் போதை ஒழிப்புப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net