கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை

கோவையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமியின் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில், சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் அடித்து துன்புறுத்தி கயிறொன்றின் ஊடாக கழுத்து நெரிக்கப்பட்டு, கழுத்திலுள்ள நரம்பு துண்டாகி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த வழக்கின் விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமியின் விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் 6 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கோவை- துடியலூர், கஸ்தூரி நாயக்கன்புதூரைச் சேர்ந்த தொழிலாளியின் 7 வயது மகளான சிறுமி, கடந்த 25 ஆம் திகதி திடீரென காணாமல் போனார்.

காணாமல் போன மறுநாள் வீட்டின் அருகில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net