சர்வதேச நெருக்கடிகளுக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு விஜயம்
சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் (ICG) இலங்கைக்கான திட்ட பணிப்பாளர் அலன் கீனன் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த மேற்படி குழுவினர் அவர்களின் தற்போதைய போராட்ட நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
40ஆவது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா சபை கால நீடிப்பை வழங்கியுள்ளதன் மூலம் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளை ஏமாற்றியுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருவதனால் தாம் விரைவில் தமது உறவுகளை தேடி அலைந்து களைத்து இறந்துபோக வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்படி குழுவினரிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் 762 நாட்களாக போராடிவரும் கேப்பாபுலவு மக்களை சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் சென்று பலவேறு மக்களுடன் கலந்துரையாடியதுடன் இடங்களையும் பார்வையிட்டனர்.