இனப்பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும்!
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விடயத்தில் காணப்படும் இழுபறி நிலைமைக்கும் சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
”அரசியல் அமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
இந்த செயற்பாட்டிற்கு சர்வதேச நாடுகள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.
அதேபோல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை இலங்கை அரசோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ தீர்க்காவிட்டால், சர்வதேச நாடுகள் இதனை தீர்க்க வேண்டுமென நாம் வற்புறுத்துகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.